ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் எடப்பாடி அணி வேட்பாளருக்கு பாஜ முழு ஆதரவு அளிக்கும்: அண்ணாமலை அறிவிப்பு

சென்னை: தேர்தலில்  எடப்பாடி அணி வேட்பாளருக்கு பாஜ ஆதரவு அளிக்கும் என்று அண்ணாமலை அறிவித்துள்ளார். தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை: தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், ஈரோடு-கிழக்கு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளராக, இரட்டை இலை சின்னத்திலே போட்டியிடும், கே.எஸ்.தென்னரசுக்கு பாஜ, தனது முழு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பாக, சட்டப்பூர்வ அதிமுக வேட்பாளரை முன்னிறுத்தி இருக்கும், இடைக்காலப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனி்சாமிக்கும், பொதுநலன் கருதி, கூட்டணியின் நன்மை கருதி, தங்களது வேட்பாளரை வாபஸ் பெற்றிருக்கும் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், நன்றி. ஓரணியில் திரண்டிருக்கும், நாம் அனைவரும், அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் கே.எஸ்.தென்னரசுவின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். குறிப்பாக, பாஜவின் தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், கூட்டணியின் வெற்றிக்காக கடுமையாக பாடுபட வேண்டும். இந்த இடைத்தேர்தல் வெற்றி வருங்கால தேர்தல் வெற்றிகளுக்கு வரவேற்பு கூறும் வண்ணம் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வெற்றி வேட்பாளராக களம் காணும் கே.எஸ்.தென்னரசுக்கு நல்வாழ்த்துக்களையும், பாஜவின் நல்லாதரவையும், தெரிவித்துக் கொள்கிறேன்.

Related Stories: