*15 பேர் மீது வழக்கு பதிவு
மார்த்தாண்டம் : கொல்லஞ்சி கிராம பஞ்சாயத்தில் நள்ளிரவில் தெருவிளக்கை அணைத்து, கேமராவை உடைத்து ஜேசிபி மூலம் ரோடு சேதப்படுத்தப்பட்டது. இது தொடர்பாக 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.மார்த்தாண்டம் அருகே கொல்லஞ்சி கிராம பஞ்சயத்துக்கு உட்பட்ட கல்லுக்கூட்டம் புரக்காரவிளை பண்டாரவிளை ரோடு உள்ளது.
நட்டாலம் செருவாரவிளையை சேர்ந்த சுந்தர்ராஜ் மகன் ஜஸ்டின்ராஜ்(44), இதே பகுதியைச் சேர்ந்த காசி நாடார் மகன் ஜெயசிங் (38) ஜாண்சன் (60) மற்றும் 15 பேர் சம்பவத்தன்று நள்ளிரவு தெரு விளக்கை அணைத்துள்ளனர். தனியாருக்கு சொந்தமான சிசிடிவி கேமராவை உடைத்து அவரது வீட்டை வெளியில் பூட்டி, நம்பர் பிளேட் இல்லாத ஜெசிபி மூலம் புறக்காரவிளை பண்டாரவிளை கான்கிரீட் ரோட்டை சேதப்படுத்தி உள்ளனர்.இதை தடுத்து நிறுத்திய வார்டு உறுப்பினர் மேரி சாந்தியையும் தாக்கி, அவரது மொபைல் போனை உடைத்ததாக கூறப்படுகிறது .இதுகுறித்து கொல்லஞ்சி கிராம பஞ். தலைவர் சலோமி மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஜஸ்டின்ராஜ், ஜெயசிங், ஜாண்சன் மற்றும் கண்டால் தெரியும் 15 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.