ஈரோடு: இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய வாகன தணிக்கையில் ரூ.1.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. எலக்ட்ரிகல் கடை நடத்தி வரும் தேவகுமார் என்பவர் உரிய ஆவணமின்றி எடுத்துச் சென்ற ரூ.1.15 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. தேவகுமாரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.15 லட்சம் ரொக்கம் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31ம் தேதி தொடங்கி, நாளை (பிப்.7) நிறைவு பெறுகிறது. இந்த இடைத்தேர்தலில் தேர்தல் நடத்தை விதிமுறை அமல்படுத்தப்பட்டு பறக்கும் படையினர் மற்றும் காவல் துறையினர் தேர்தல் பணிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா, பரிசு பொருட்கள் உள்ளிட்ட பொருட்கள் வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக பல்வேறு அரசியல் கட்சியினர் ஈடுபடுபவர்கள் என்பதை கண்காணிக்கும் வகையில் காவல்துறையினர் சோதனையிட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொகுதியின் எல்லைகளில் வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு செய்வதற்காக மூன்று நிலை கண்காணிப்பு குழுக்களும் தொகுதிக்குள் சோதனை நடத்த மூன்று பறக்கும் படை குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குழுவிலும் ஒரு அலுவலர், ஒரு காவல் உதவி ஆய்வாளர் மற்றும் 3 போலீசாரும் ஒரு வீடியோ ஒளிப்பதிவாளரும் பணியமர்த்தப்பட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் ஏதேனும் வந்தால் அந்த இடத்திற்கு பறக்கும் படை குழு சென்று சோதனை நடத்தும். இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதியில் நடத்திய வாகன தணிக்கையில் உரிய ஆவணமின்றி கொண்டு சென்ற ரூ.1.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.