எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கத்தில் தான்யா நடிக்கும் றெக்கை முளைத்தேன்

சென்னை: சசிகுமார் நடித்த ‘சுந்தரபாண்டியன்’ என்ற படத்தில் இயக்குனராக அறிமுக மானவர், எஸ்.ஆர்.பிரபாகரன். பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்த ‘இது கதிர்வேலன் காதல்’, விக்ரம் பிரபு நடித்த ‘சத்ரியன்’, சசிகுமார் நடித்த ‘கொம்பு‌வச்ச சிங்கம்டா’ ஆகிய படங்களை இயக்கினார். தற்போது பங்கஜம் ட்ரீம்ஸ் புரொடக்‌ஷன்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கி, முதல் படத்தை அவரே இயக்கியுள்ளார்.

இதில், தான்யா ரவிச்சந்திரன் ஹீரோயினாக நடித்துள்ளார். ஹீரோயினுக்கு அதிக முக்கியத்துவம் கொண்ட இப்படத்துக்கு ‘றெக்கை‌ முளைத்தேன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கிரைம் திரில்லரான இதில் ஜெயப்பிரகாஷ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், ஜீவா ரவி, மீரா கிருஷ்ணன், சுவாதிஸ், பிரபா, மெர்லின், நிதிஷா ஆகியோர் நடித்துள்ளனர்.

கணேஷ் சந்தானம் ஒளிப்பதிவு செய்ய, ‘கிடா’ தீசன் இசை அமைத்துள்ளார். கார்த்திக் நேத்தா, அ.பா.ராஜா பாடல்கள் எழுதியுள்ளனர். இப்படத்தின் தலைப்பை சசிகுமார் வெளியிட்டார். பர்ஸ்ட் லுக் போஸ்டரை சமுத்திரக்கனி, கார்த்திக் சுப்பராஜ், மடோனா செபாஸ்டியன், சூரி வெளியிட்டனர். படம் குறித்து எஸ்.ஆர்.பிரபாகரன் கூறுகையில், ‘கல்லூரியில் படிக்கும் இளைஞர்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை ஹீரோவை முன்னிலைப்படுத்தி சில படங்கள் இயக்கினேன். ஆனால், ஒரு எழுத்தாளனாக நல்ல கருத்துள்ள கதைகளை‌, ஹீரோக்களை மையப்படுத்திய படங்களில் என்னால் சொல்ல முடியவில்லை. நல்ல கதை களை கமர்ஷியலாகப் பதிவு செய்ய விரும்புகிறேன். அதற்காகத்தான் தயாரிப்பு நிறுவனம் தொடங்கினேன். நல்ல கதைகளையும், புதுமுக இயக்குனர்களையும் எனது நிறுவனத்தில் அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளேன்’ என்றார்.

Related Stories: