துணிவு பட பாணியில் வங்கிக்குள் புகுந்து போலி டைம்பாம், துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி: கல்லூரி மாணவர் கைது

தாராபுரம்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே அலங்கியம் காந்தி நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் சுரேஷ் (19), தனியார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர். அலங்கியத்தில் உள்ள கனரா வங்கி கிளையில், கொள்ளையடிக்க திட்டமிட்ட சுரேஷ், கருப்பு நிற பர்தா அணிந்து கத்தி, கை துப்பாக்கி மற்றும்  டைம்பாமுடன் நேற்று வங்கிக்குள் நுழைந்தார். பின்னர் வங்கி மேலாளரின் மீது கத்தியை வைத்து மிரட்டி பாம் வெடிக்க வைப்பதாக கூறியும், துப்பாக்கியை காட்டி சுட்டு விடுவதாக கூறியும் கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

அப்போது, வாடிக்கையாளர் ஒருவர் சுரேஷின் தலையில் தாக்கினார்.

இதில் நிலைதடுமாறியவரை பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்தனர். தகவலறிந்து அலங்கியம் போலீசார் வந்து  விசாரணை நடத்தினர். இதில், துணிவு சினிமாவை பார்த்து வங்கி கொள்ளை முயற்சியில் ஈடுபட்டதாகவும், தான் கொண்டு வந்த கை துப்பாக்கி, டைம் பாம் ஆகியவை டம்மி எனவும் கூறினார். கத்தி மற்றும் கருப்புநிற பர்தா, ஆகியவற்றை தனியார் ஆன்லைன் தளத்தில் வாங்கியதையும் போலீசாரிடம் சுரேஷ் தெரிவித்தார். இதையடுத்து, போலீசார் சுரேஷை கைது செய்தனர்.பொதுமக்கள் சுற்றி வளைத்து பிடித்த போது தலையில் படுகாயம் ஏற்பட்டதால், மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

Related Stories: