வேளச்சேரி: முன் விரோத தகராறால், வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரும்பக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் சிவா (எ) ஸ்பீடு சிவா. இவர் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இவர் கடந்த 31ம் தேதி இரவு மேடவாக்கம், செம்மொழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடியது. தகவலறிந்த பள்ளிகரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிவாவை உடனடியாக மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.