முன் விரோத தகராறில் வாலிபரை வெட்டி கொல்ல முயற்சி: 7 பேர் கைது

வேளச்சேரி: முன் விரோத தகராறால், வாலிபரை வெட்டி கொல்ல முயன்ற 7 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெரும்பக்கம், இந்திரா நகரை சேர்ந்தவர் சிவா (எ) ஸ்பீடு சிவா. இவர் மீது பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் 4 கொலை முயற்சி வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் இவர் கடந்த 31ம் தேதி இரவு மேடவாக்கம், செம்மொழி சாலையில் உள்ள டாஸ்மாக் கடை அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு   கும்பல் அவரை சரமாரியாக கத்தியால் வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். இதையடுத்து அந்த கும்பல் தப்பி ஓடியது. தகவலறிந்த பள்ளிகரணை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சிவாவை உடனடியாக மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு‌ அனுப்பி வைத்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், இவரால் பாதிக்கப்பட்டவர்கள் தான் இவரை பின் தொடர்ந்து வந்து கொலை செய்ய முயற்சித்தது தெரியவந்தது. இதையடுத்து, போலீசார் தலைமறைவாக இருந்த பெரும்பாக்கம் வனத்துறை குடியிருப்பை சேர்ந்த அமுல்ராஜ் (35), செல்வம் (40), சேலையூர் மகாலஷ்மி நகரைச் சேர்ந்த வினோத் குமார் (32), பதுவஞ்சேரி, சத்யா நகரை சேர்ந்த பார்த்திபன் (எ) பன் (23), ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்த அய்யப்பன் (31), ஊரப்பாக்கத்தை சேர்ந்த ரவி (எ) ஜேசிபி (25), செம்பாக்கத்தை சேர்ந்த நீலா என்கிற நீலகண்டன் (32) ஆகிய 7 பேரை கைது செய்தனர். பின்னர் அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி,  நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.

Related Stories: