சொத்துவரி நிலுவையில் வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் சொத்துவரியினை உடனடியாக செலுத்த வேண்டும்: சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

சென்னை: நடப்பு நிதி ஆண்டு முடிவடைய இரண்டு மாதங்களே உள்ள நிலையில் சொத்துவரி நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள் பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியினை உடனடியாக செலுத்தி சென்னை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919, பிரிவு-103ன்படி, சொத்துவரியானது முதன்மையாக செலுத்தப்பட வேண்டிய வரி ஆகும். சட்டப் பிரிவு-104ன்படி  ஒவ்வொரு அரையாண்டு தொடக்கத்தின் முதல் 15 தினங்களுக்குள் சொத்துவரி உரிமையாளர்களால்  சொத்துவரி செலுத்தப்பட வேண்டும். சொத்துவரி செலுத்த தவறிய உரிமையாளர்களிடமிருந்து சொத்துவரி வசூலிப்பது தொடர்பாக, சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 138, அட்டவணை -IV, பகுதி -VI, விதி-20 முதல் 29-ல் வழிவகைகள் வழங்கப்பட்டுள்ளது.

தற்போது மாநகராட்சிக்கு சொத்துவரி ரூ.50,000/-க்குள் நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களின் எண்ணிக்கை சுமார் 5.93 லட்சமாக உள்ளது.   இவ்வகையில்  சொத்து உரிமையாளர்கள் செலுத்த வேண்டிய சொத்த வரி நிலுவைத் தொகை ரூ.346.63 கோடி   உள்ளது. மேற்படி  சொத்துவரி  நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களுக்கு  சொத்துவரி செலுத்தக் கோரி தபால் துறை மூலமாக தாக்கீது சம்மந்தப்பட்ட சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு சார்வு செய்யப்பட உள்ளது.

இவ்வாறு சார்வு செய்யப்படும் தாக்கீதுகளில் (Notice) குறிப்பிட்டுள்ள நிலுவைத் தொகையினை,   சொத்து உரிமையாளர்கள் எவ்வித சிரமுமின்றி, எளிதாக   செலுத்த  QR Code  வசதி தாக்கீதுகளில் அச்சிடப்பட்டுள்ளது.  இந்த வசதியினை பயன்படுத்தி நிலுவை சொத்துவரியினை செலுத்தலாம். மேலும், சொத்துவரியினை வரி வசூலர், இணையதளம், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் அமைந்துள்ள இ-சேவை மையங்கள், கைபேசி செயலி  மற்றும் BBPS (Gpay, PhonePe, Amazon, iMobile pay) ஆகிய  முறைகளில் செலுத்த வழிவகைகள் உள்ளது.  

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்களின் முகவரிக்கு தபால் துறை மூலமாக சார்வு செய்யப்படும் தாக்கீதுகளில் (Notice) கண்டுள்ள சொத்துவரி நிலுவைத் தொகையினை தாக்கீதுகளில் குறிப்பிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. சொத்துவரியிகை செலுத்த தவறும் சொத்து உரிமையாளர்களின் சொத்துக்கள் மீது  சென்னை மாநகராட்சி முனிசிபல் சட்டம் 1919ன்படி, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக பெறப்பட்டு வரும் சொத்துவரி மூலம் சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துதல், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள்  மற்றும் சாலைகள்  பராமரித்தல், பொது சுகாதாரம், நோய்த் தடுப்பு பணி போன்ற அத்தியாவசியப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே,  நடப்பு நிதி ஆண்டு (2022-2023) முடிவடைய இரண்டு மாதங்களே உள்ள நிலையில்,  சொத்துவரி நிலுவை வைத்துள்ள சொத்து உரிமையாளர்கள்  பெருநகர சென்னை மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய நிலுவை சொத்துவரியினை உடனடியாக செலுத்தி, சென்னை மாநகரின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

Related Stories: