பிபிசி ஆவணப்படம் விவகாரம் ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்

புதுடெல்லி: பிபிசி ஆவணப்படம் விவகாரம் தொடர்பாக ஒன்றிய அரசு பதிலளிக்க சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து பிபிசி தயாரித்துள்ள இந்தியா - மோடிக்கான கேள்விகள் என்ற ஆவணப்படத்தை யூடியூப், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக  வலைதளங்களில் வெளியிட ஒன்றிய அரசு கடந்த 18ம் தேதி தடை விதித்தது.  என்றாலும், பிபிசி ஆவண படம் தொடர்பான கருத்துகள் சமூக வலைதளங்களில்  பதிவிடப்பட்டு வருகின்றன. அதோடு பிபிசி ஆவணப்படத்துக்கான இணைப்பும் சமூக  வலைதளங்களில் பதிவிடப்படுகிறது. இத்தகைய சமூக வலைதளப் பதிவுகளுக்கும்  ஒன்றிய அரசு தடை விதித்தது.

இந்த ஆவணப்படம் குறித்து, பிரசாரப் படம்  என்றும், காலனியாதிக்க மனநிலை என்றும் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம்  கருத்து தெரிவித்திருந்தது. ஒன்றிய அரசின் தடையை எதிர்த்து மாணவர்கள் உள்ளிட்ட அமைப்பினர் போராட்டம் நடத்தினர். சில இடங்களில் தடையை மீறி ஆவணப்படம் ஒளிபரப்பு செய்யப்பட்டது. அப்போது மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாகவும் புகார்கள் எழுந்தன. ஒன்றிய அரசின் தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி சஞ்சய் கன்னா அமர்வு முன் மேற்கண்ட மனு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘ஆவணப்படம் தொடர்பான அசல் பதிவு விபரங்களை நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தாக்கல் செய்ய வேண்டும். மாணவர்கள் உள்ளிட்டோர் மீது தாக்குதல் நடந்ததா? என்பது குறித்தும், அதுதொடர்பாக எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை குறித்த விபரங்களையும் தெரிவிக்க வேண்டும். தடை விதிக்கப்பட்ட உத்தரவு அசல் ஆவணத்தை தாக்கல் செய்ய வேண்டும்’ என்று கூறிய உச்ச நீதிமன்றம், ஒன்றிய அரசு மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் எனக்கூறி நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Related Stories: