திருச்சி: ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் நாளை தேரோட்டம் நடைபெறுகிறது. இன்று காலை நம்பெருமாள் பல்லக்கில் புறப்பாடு நடந்தது. திருச்சி ஸ்ரீ ரங்கம் ரங்கநாதர் கோயிலில் ஆண்டுதோறும் தைத்தேரோட்ட திருவிழா 11 நாட்கள் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தை தேரோட்ட திருவிழா கடந்த 26ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நம்பெருமாள் பல்வேறு வாகனத்தில் வீதியுலா நடைபெற்றுவருகிறது. விழாவின் 7ம் நாளான நேற்று மாலை 6.30 மணிக்கு திருச்சிவிகையில் நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் புறப்பட்டு கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளினார். பின்னர் பூந்தேர் அலங்காரத்தில் நான்கு உத்திர வீதிகளில் வலம் வந்தார். பின்னர், ஆழ்வான் திருச்சுற்று வழியாக இரவு 9 மணிக்கு தாயார் சன்னதி வந்து திருமஞ்சனம் கண்டருளினார்.