கடலூர்: கடலூர் தேவனாம்பட்டினம் சில்வர் பீச் பகுதியில் கடல் சீற்றம் காரணமாக மண் அரிப்பு ஏற்பட்டது. தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கடலூர் உள்ளிட்ட துறைமுக பகுதியில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை எச்சரிக்கை காரணமாக கடலூர் மாவட்டத்தில் மீன்பிடி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே நேற்று காலை முதல் கடலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் கடலோர பகுதியிலும் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.