தாலி கட்டும் நேரத்தில் மணமகன் ஓட்டம் மண்டபத்துக்கு வந்தவர் மாப்பிள்ளை ஆனார்

சிதம்பரம்: கடலூர் மாவட்டம் உச்சிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் ஜெயக்குமார்(28). இவர் கடலூர் மாவட்ட நீதித்துறையில் தொழில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் சிதம்பரத்தை சேர்ந்த மகாலட்சுமிக்கும் நேற்று காலை சிதம்பரம் கமலீஸ்வரன் கோயில் தெருவில் உள்ள மண்டபத்தில் திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக நேற்று முன்தினம் மாலை மணமக்களின் உற்றார், உறவினர்கள் மண்டபத்துக்கு வந்திருந்தனர். மாலை 7 மணிக்கு அருகில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மணமக்கள் ஊர்வலமாக வாகனத்தில் வந்தனர். இது இரவு 9 மணிவரை  நடைபெற்றது.

அனைவரிடமும் ஆசி பெற்றபின் மணமக்கள் தங்கள் அறைகளுக்கு சென்றனர். நள்ளிரவு வரை இருவரும் போனில் பேசியுள்ளனர். காலையில் தாலி கட்டும் நேரத்தில் யாரிடமும் சொல்லாமல் மாப்பிள்ளை மாயமாகிவிட்டார். எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதனால் மணமகள், உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து மண்டபத்தில் இருந்த சிதம்பரம் அருகே வேளங்கிபட்டு கிராமத்தை சேர்ந்த உறவினர் மகன் இளவரசன் திடீர் மாப்பிள்ளையாக மாறி மணமகள் கழுத்தில் தாலி கட்டினார்.

Related Stories: