மின் இணைப்புடன் ஆதார் எண்ணை நேற்று வரை 2.47 கோடி பேர் இணைத்துள்ளனர்: அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் நேற்று வரை 2.47 கோடி பேர் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். மின் நுகர்வோர் அனைவரும் தங்களது மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என மின் வாரியம் அறிவித்தது. இதையடுத்து மின் நுகர்வோர் தங்களது மின் இணைப்புடன், ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர். தமிழகம் முழுவதும் 2 கோடியே 32 லட்சம் வீட்டு மின் இணைப்புகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றன. இதுதவிர 23 லட்சம் விவசாய மின் இணைப்புகளும், 9 லட்சம் குடிசை மின் இணைப்புகளும் உள்ளன.

ஜன.31ம் தேதியுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் நிறைவடையும் என கூறப்பட்டது. ஆனால் அப்போது 9 லட்சத்திற்கும் மேற்பட்டோர் இணைக்காமல் இருந்ததால் பிப்.15ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலமாகவும், மின்வாரிய அலுவலகங்களிலும் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நடந்து வருகிறது. இதற்காக, தமிழகம் முழுவதும் மின்வாரிய அலுவலகங்களில் 2,811 சிறப்பு முகாம்களும், கூடுதலாக 2,811 நடமாடும் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் வீடுகளுக்கு நேரடியாக சென்று மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியிணை தொடங்க அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இது குறித்து மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்  கூறியதாவது: மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியில் நேற்று (ஜன.31ம் தேதி) மட்டும் 2,811 பிரிவு அலுவல சிறப்பு முகாம்கள் & 2,811 சிறப்பு நடமாடும் முகாம்களின் மூலம் 6.63 லட்சம் எண்கள் இணைக்கப்பட்டது ஆன்லைனில் மூலம் இணைக்கப்பட்டது 1.62 லட்சம். நேற்று மாலை 7.00 மணி வரை மொத்தம் 2.47 கோடி பேர் இணைத்துள்ளனர். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

Related Stories: