24,924 ரேசன் கடைகளில் உள்ள 1.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,348.59 கோடி விநியோகம்: தமிழ்நாடு அரசு

சென்னை: அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ளோருக்கான பொங்கல் பரிசுத் தொகையாக இன்று காலை 10 மணி வரை ரூ.3348.59 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. 24,924 ரேசன் கடைகளில் உள்ள 1.11 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,348.59 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்,

“பொங்கல் பரிசுத் தொகுப்பு: அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகாம்வாழ் இலங்கை தமிழர்கள் குடும்பங்களுக்கு 10.01.2026 அன்று காலை 10 மணி வரை 24,924 நியாயவிலைகடைகளில் உள்ள 1,11,61,979 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை ரூ. 3348.59 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது. தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் 2026 திருநாளை மக்கள் அனைவரும் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழ்நாடு அரசு 2,22,91,710 எண்ணிக்கையிலான அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக்கரும்பு வழங்கப்படும் எனவும், பொங்கல் திருநாளை மேலும் சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் ரொக்கப் பரிசாக ரூ.3,000/- வழங்கப்படும்” எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்தார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 8,1.2026 சென்னை, பட்ரோடு நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பினையும், வேட்டி, சேலைகளையும் வழங்கி, தொடங்கி வைத்தார். மேலும், துணை முதலமைச்சர் சென்னை, சிந்தாதரிப்பேட்டை TUCS நியாயவிலைகடையிலும், அந்தந்த மாவட்டத்தில் அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மூலமாக இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாடு முழுவதும் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் ஆகியோர்களுக்கு 2026 பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான டோக்கன்கள் குடும்ப அட்டைதாரர்களுக்கு 04.01.2026 முதல் 07.01.2026 வரை தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் வழங்கப்பட்டது.

இதில், முதல் நாள் 200 குடும்ப அட்டைத்தாரர்களும், இரண்டாம் நாள் 300 முதல் 400 வரையிலான குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்கு ஏதுவாக தொடர்புடைய நியாயவிலைக்கடைப் பணியாளர்களால் டோக்கன்கள் விநியோகம் செய்யப்பட்டது. 10.1.2026 அன்று காலை 10 மணி வரை 24,924 நியாயவிலை கடைகளில் உள்ள 1,11,61,979 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத் தொகை 3348.59 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது”.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: