தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதிய நிலக்கரி கையாளும் இயந்திரங்கள்-காணொலி மூலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

தூத்துக்குடி : தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ள நிலக்கரி கையாளும் இயந்திரங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

எரிசக்தி துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தால் தூத்துக்குடி அனல் மின் நிலையத்திற்காக தூத்துக்குடி துறைமுகம் தளம் 1ல் புதிதாக நிறுவப்பட்டுள்ள அதிக திறன் கொண்ட 2 நிலக்கரி கையாளும் இயந்திரங்களின் பணிகள் துவங்கப்பட்டது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் சார்பில் தூத்துக்குடி துறைமுகத்தில் புதிய இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கீதாஜீவன்,  செந்தில்பாலாஜி, துறையின் செயலாளர், மின்சார வாரியத்தின் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தூத்துக்குடியில் நடைபெற்ற விழாவில் கலெக்டர் செந்தில்ராஜ், கலந்துகொண்டு நவீன இயந்திர மயமாக்கப்பட்ட நிலக்கரி கையாளும் தளத்தினை பார்வையிட்டு தெரிவித்ததாவது:

தூத்துக்குடி புதிய துறைமுகத்தில் புதுப்பித்து மேம்படுத்திய நவீன இயந்திரமயமாக்கப்பட்ட நிலக்கரி கையாளும் தளத்தின் மூலம் ₹80 கோடி சேமிக்கப்படும். மேலும் கையாளும் திறன் மற்றும் வேகம், உற்பத்தி அதிகரிக்கும். தூத்துக்குடி அனல்மின் நிலையம் இருப்பதால் தான் தென் தமிழகத்திற்கு அதிகளவில் முதலீடுகள் வருகிறது. இயற்கை பேரிடர்களின் தொடக்கத்தின் போதும், நிறைவின்போதும் மின்வாரிய பணியாளர்கள் தான் பணியாற்றுவார்கள் என்றார்.

நிகழ்ச்சியில் தூத்துக்குடி துறைமுக துணைத்தலைவர் பிமல்குமார்ஜா, தலைமைப்பொறியாளர் ரவிக்குமார், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் தூத்துக்குடி அனல்மின்நிலைய செயற்பொறியாளர் (பொறுப்பு) ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.தமிழ்நாட்டில் அதிகப்படியான மின் உற்பத்தி அனல்மின் நிலையங்கள் மூலமாக கிடைக்கப்பெறுகிறது. நிலக்கரியை வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்கின்றனர். தற்போது நிலக்கரி கையாளும் இயந்திரங்களை முதல்வர் தொடங்கி வைத்துள்ளார்.

தமிழ்நாடு மக்களுக்கு தடையில்லா மின்சாரம் கிடைப்பதற்காக தூத்துக்குடி அனல்மின் நிலையத்திற்காக அதிக கொள்ளளவில் நிலக்கரியை கையாளும் விதமாக ₹325 கோடி செலவில், நிலக்கரி கையாளும் இயந்திரங்கள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் நிறுவப்பட்டிருக்கிறது.இதன் மூலம் ஆண்டுக்கு ₹80 கோடி சேமிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: