காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம்: புதுச்சேரி அரசு அறிவுறுத்தல்

புதுச்சேரி: தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதால், காரைக்கால் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்ப புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்; இலங்கை அருகே தென்மேற்கு வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டுள்ளது.

இதன் காரண்மாக தமிழ்நாடு கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் (31-01-2023) முதல் (03-02-2023) வரை லேசான முதல் மிதமான மழை பெய்யும். மேலும் (31-01-2023) முதல் (03-02-2023) வரை உள்ள நாட்களில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மேலும், தொடர் கன மழைக்கு வாய்ப்புள்ளதாலும் மற்றும் கடல் அலைகளின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதாலும் மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்படுகிறது. எனவே, மீனவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மறு உத்தரவு வரும்வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடலில் எவரேனும் மீன்பிடித்துக் கொண்டிருப்பின் உரிய முறையில் தகவல் தெரிவித்து கரைக்கு திரும்பி வர அறிவுறுத்துமாறு கோரப்படுகிறது. மேற்கண்ட விபரங்களை தங்களது கிராமத்தில் ஒலிபெருக்கி மூலம் கிராம மக்களுக்கு தெரிவித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி தங்கள் மீன்பிடிப்படகுகள் மற்றும் வலைகளுக்கு நேரிடும் சேதத்தை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

கண்ணாடி நுண்ணிழை மீன்பிடி படகின் இஞ்சின் மற்றும் வலைகளை தங்களது கிராமத்தின் பணிமணையில் பாதுகாப்பாக வைக்குமாறும் இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மேலும், தங்கள் கிராமத்தை சேர்ந்த படகு ஏதேனும் திரும்பாமல் இருப்பின் அதன் விபரங்களை இந்த அலுவலகத்திற்கு தெரிவித்திட கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories: