ஆரணி: ஆரணியில் போலீசாரை தரக்குறைவாக பேசி மிரட்டிய விசிக மாவட்ட செயலாளரை 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து, கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் அரசு இடத்தை ஆக்கிரமித்து ஓய்வு பெற்ற பிடிஓ அலுவலக மேலாளர் கடைகள் கட்டி வாடகைக்கு நடத்தி வந்தார். அதில், ஒரு கடையை இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னகண்ணனும், மற்றொரு கடையை விசிகவினர் கட்சி அலுவலகமும் நடத்தினர். கடந்த மாதம் சின்னகண்ணனின் கடையை விசிகவினர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் கூறப்பட்டது. இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் போலீசாரை தரக்குறைவாக பேசி திட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.