போலீசாரை தரக்குறைவாக பேசிய மாவட்ட செயலாளர் கட்சியிலிருந்து நீக்கம்: திருமாவளவன் அறிவிப்பு

ஆரணி: ஆரணியில் போலீசாரை தரக்குறைவாக பேசி மிரட்டிய விசிக மாவட்ட செயலாளரை 3 மாதத்திற்கு சஸ்பெண்ட் செய்து, கட்சி தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை வீதியில் அரசு இடத்தை ஆக்கிரமித்து ஓய்வு பெற்ற பிடிஓ அலுவலக மேலாளர் கடைகள் கட்டி வாடகைக்கு நடத்தி வந்தார். அதில், ஒரு கடையை இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்த சின்னகண்ணனும், மற்றொரு கடையை விசிகவினர் கட்சி அலுவலகமும் நடத்தினர். கடந்த மாதம் சின்னகண்ணனின் கடையை விசிகவினர் ஆக்கிரமிப்பு செய்ததாக புகார் கூறப்பட்டது. இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன் போலீசாரை தரக்குறைவாக பேசி திட்டிய காட்சி சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர்களை வரவேற்கும் வகையில் விசிகவினர் ஆரணியில் பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக காரில் சென்றனர். அப்போது போலீசாரை அவதூறாக பேசி திட்டினர். இந்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து, விசிக மாவட்ட செயலாளர் பாஸ்கரன், ஒன்றிய செயலாளர் ரமேஷ் உட்பட 50 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில், முதற்கட்டமாக 9 பேரை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், போலீசாரை தரக்குறைவாக பேசிய மாவட்டச் செயலாளர் பாஸ்கரன்(எ) பகலவனை 3 மாதத்துக்கு கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்வதாக கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

Related Stories: