சேந்தமங்கலம்: சேந்தமங்கலம் அருகே காதல் திருணம் செய்த புதுப்பெண்ணை மர்ம நபர்கள் காரில் கடத்திச்சென்றது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அடுத்த அக்கியம்பட்டியை சேர்ந்த வேல்முருகன் மகன் பிரவீன்குமார் (22). பி.இ பட்டதாரி இவர், எருமப்பட்டி அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்த மோகன்ராஜ் மகள் கவுசல்யா (22) என்பவரை, கடந்த ஒரு வருடமாக காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 23ம் தேதி வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டு, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர்.
இதையடுத்து இருவரின் பெற்றோரை காவல் நிலையத்துக்கு வரவழைத்த போலீசார், பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கவுசல்யா, தனது கணவருடன் செல்வதாக கூறினார். இதை அடுத்து போலீசார் அவரை, பிரவீன்குமாருடன் அனுப்பி வைத்தனர். இந்நிலையில் கடந்த புதன்கிழமை அக்கியம்பட்டியில் உள்ள பிரவீன்குமாரின் வீட்டில் கவுசல்யா இருந்தபோது, அங்கு காரில் வந்த மர்மநபர்கள், கவுசல்யாவை வலுக்கட்டாயமாக குண்டுகட்டாக தூக்கி காரில் ஏற்றி கடத்திச்சென்றனர். புகாரின்பேரில், சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து கவுசல்யாவை அவரது பெற்றோர் ஆட்களை வைத்து கடத்திச்சென்றார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.