மோடியை அவுட்டாக்கிய மதுரை பள்ளி மாணவி: சிரிப்பலையால் அதிர்ந்த அரங்கம்

மதுரை: பிரதமர் மோடியிடம் அதிரடி கேள்விகளை எழுப்பி, மதுரை மாணவி அசத்தினார். ‘பரிக்‌ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள், ஆசிரியர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி டெல்லி டால்கொடரா மைதானத்தில் நேற்று நடந்தது. இந்நிகழ்ச்சியில் டெல்லியில் நேரடியாகவும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து காணொலி வாயிலாகவும் மாணவ, மாணவியர் கேள்விகளை எழுப்பினர். இதற்கு பிரதமர் மோடி பதிலளித்து பேசினார்.

மதுரை திருப்பரங்குன்றம் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவி அஸ்வினி,  பிரதமரிடம் முதல் கேள்வியை எழுப்பினார்.

மாணவி, பிரதமரிடம், ‘‘தேர்வு மதிப்பெண் குறித்த பெற்றோரது ஏமாற்றத்தை கையாள்வது எப்படி? அவர்களது எதிர்பார்ப்பு என்பது மிகவும் அதிகமாக உள்ளது. ஆனால், தேர்வு என்பது அவர்கள் நினைப்பதுபோல் எளிமையானது இல்லை. நல்ல மதிப்பெண் பெறும் சிறந்த மாணவியாக இருப்பதென்பது சவாலானது என்பதை அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது எனத்தெரியவில்லை. தேர்வு நேரத்தில் மாணவ, மாணவியர் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர். சமீப காலமாக பெற்றோரின் இதுபோன்ற எதிர்பார்ப்புகள் மாணவர்களின் மீதான நம்பிக்கையை கேள்விக்குள்ளாக்குகிறது. இதற்கு வழிகாட்ட வேண்டும். தேர்வினால் வரும் மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?’’ என்று அதிரடியாக கேள்வியை, மாணவி அஸ்வினி எழுப்பினார்.

இதற்கு  பதிலளித்த பிரதமர் மோடி, ‘‘கிரிக்கெட்டில் ஹூக்ளி என்ற முறை உள்ளது. அதுபோல் முதல் பந்திலேயே மாணவி அஸ்வினி என்னை அவுட்டாக்க முயல்கிறார்’’ என்றார். இதைக் கேட்டு அரங்கமே சிரிப்பலையில் அதிர்ந்தது. தொடர்ந்து பேசிய பிரதமர், ‘‘பிள்ளைகள் தேர்வில் அதிக மதி்ப்பெண் எடுக்க வேண்டும் என பெற்றோர் நினைப்பது இயற்கைதான். அதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் படிப்பில் பிள்ளைகள் கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர்களும் தேர்வு மதிப்பெண் குறித்த அழுத்தத்தை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டாம்’’ என்றார். இந்நிகழ்வு குறித்து மாணவி அஸ்வினி கூறும்போது, ‘பிரதமர் மோடியுடனான கலந்துரையாடல் மிகுந்த மகிழ்ச்சி அளித்தது’’ எனறார்.

Related Stories: