கன்னியாகுமரி: ஒன்றிய அரசின் புனித் சாகர் அபியான் திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தம் செய்யும் பணி நேற்று நாடு முழுவதும் நடைபெற்றது. அதன்படி குமரி மாவட்டத்தில் சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடற்கரையை சுத்தம் செய்யும் பணியில் பள்ளி, கல்லூரிகளை சேர்ந்த என்.சி.சி. மாணவ, மாணவிகள் சுமார் 150 ஈடுபட்டனர். தூய்மை பணி நிறைவடைந்ததும் மாணவ, மாணவிகளுக்கு காலை உணவு பார்சல் செய்து வழங்கப்பட்டது. இந்த உணவை சாப்பிட்ட கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் சுமார் 43 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. அவர்கள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தகவலறிந்து மாவட்ட கலெக்டர் அரவிந்த், மேயர் மகேஷ், விஜய் வசந்த் எம்.பி., எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ. ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று மாணவர்களின் நலம் விசாரித்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் விசாரித்து வருகின்றனர்.