அதிமுக வேட்பாளரை நாளை அறிவிக்க திட்டம்?.. 7 மணி நேரத்துக்கு மேலாக ஆதரவாளர்களுடன் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு..!

ஈரோடு: ஈரோடு அருகே வில்லரசம்பட்டியில் உள்ள தனியார் உணவகத்தில் ஆதரவாளர்களுடன் பழனிசாமி நடத்திய ஆலோசனை நிறைவு பெற்றது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27ம்தேதி நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதிமுக தரப்பில் எடப்பாடி அணி, ஓபிஎஸ் அணி தனித்தனியாக உள்ளதாலும், இரட்டை இலை சின்னம் இல்லாத காரணத்தினாலும் தேர்தலில் போட்டியிட அதிமுக நிர்வாகிகள் தயக்கம் காட்டி வருகின்றனர்.

இதனால் வேட்பாளர் யார் என்று அறிவிக்க முடியாத சூழ்நிலை உள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில் ஓரிரு நாட்களில் வேட்பாளரை அறிவிக்க வேண்டிய கட்டாயம் அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் வேட்பாளராக களத்தில் இறக்குவது தொடர்பாக நிர்வாகிகளை சமாதானப்படுத்துவதற்காக எடப்பாடி பழனிசாமி இன்று காலை ஈரோடு வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு ரிசார்ட்டில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, கருப்பணன், ராமலிங்கம் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் கலந்துகொண்டனர். இந்த கூட்டத்தில், அதிமுகவுக்கு ஏற்படும் பின்னடைவு பற்றி நிர்வாகிகள் எடப்பாடியிடம் விளக்கி கூறினர்.

அவர்களை சமாதானப்படுத்திய எடப்பாடி பழனிசாமி, ‘‘இரட்டை இலை சின்னம் முடங்கியுள்ள நிலையில் இந்த தேர்தலில் அதிமுக நிச்சயமாக போட்டியிட வேண்டிய அவசியம் உள்ளது. இதனால் தகுதியான வேட்பாளரை தேர்வு செய்து நிறுத்த நிர்வாகிகள் ஒத்துழைக்க வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற ெதாகுதி இடைத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் போட்டி யிடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். இதுபோல் ஓ.பன்னீர்செல்வம் அணியினரும் போட்டியிடப்போவதாக கூறியுள்ளனர். ஆனால் இருவரும் இன்னும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லை.

இந்தநிலையில், எடப்பாடி பழனிசாமி சேலத்தில் 18 மாஜி மந்திரிகளுடன் ரகசிய ஆலோசனையில் ஈடுபட்டார். இதையடுத்து, இன்று காலை ஈரோடு புறப்பட்டு சென்றார். அங்கு வில்லரசம்பட்டி நசியனூரில் உள்ள ஓட்டலில் நடக்கும் நிகழ்ச்சி ஒன்றில் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொடர்பாக 7 மணி நேரத்துக்கு மேலாக ஆதரவாளர்களுடன் பழனிசாமி நடத்திய ஆலோசனை தற்போது நிறைவு பெற்றது. இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரை நாளை அறிவிக்க பழனிசாமி தீவிரம் காட்டி வருகிறார்.

Related Stories: