ஈரோடு கிழக்கு தொகுதி திராவிட மாடல் ஆட்சியை எடை போடும் தேர்தல்: அமைச்சர் எ.வ.வேலு பேச்சு

ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கலந்துகொண்ட பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது: இடைத்தேர்தலில் வழக்கமாக எதிர்க்கட்சிகள் பலமாக இருக்கும். எனவே, ஆளுங்கட்சி போட்டியிட்டால் தான் வெற்றி பெற முடியும் என்ற நிலை இருந்து வந்தது. ஆனால், திமுகவில் தோழமை கட்சிகளுக்கு உரிய மரியாதை வழங்கும் வகையில் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்றும் குறிப்பாக இளைஞர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்ற நிலை இருந்த போதிலும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட்டணி கட்சிக்கு ஒதுக்கினார்.

தற்போது நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் நமது வேட்பாளர். தந்தை பெரியார் என்ற உணர்வு நம்மை இணைத்துள்ளது. மறைந்த திருமகன் ஈவெரா தொகுதியில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் தொடர்பாக என்னை பலமுறை நேரில் சந்தித்து வலியுறுத்தி உள்ளார். திராவிட மாடல் ஆட்சி நடத்தும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் எண்ணற்ற பல திட்டங்களை நிறைவேற்றி உள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலானது திராவிட மாடல் ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடை போடும் தேர்தலாக கருதப்படுவதால் அனைவரும் இணைந்து தேர்தல் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

தமிழ்நாட்டில் குறிப்பிடும்படி எந்த திட்டமும் செயல்படுத்தப்படவில்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறியது பற்றி கேட்டதற்கு அமைச்சர் வேலு கூறுகையில், ‘’செங்கோட்டையன் எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் அவ்வாறு கூற வேண்டிய நிலையில் உள்ளார். ஆனால், இதே செங்கோட்டையன் தான் அரசின் செயல்பாடுகள் குறித்து, சட்டமன்றத்தில் இப்படிப்பட்ட தமிழ்நாடு முதல்வரை நாங்கள் பார்த்ததே இல்லை’’ என்று பாராட்டி பேசினார். இது சட்டமன்ற குறிப்பிலேயே பதிவாகி உள்ளது. பெண்கள் பஸ்களில் கட்டணமின்றி பயணிக்கும் திட்டம், பள்ளி குழந்தைகளுக்கு காலை சிற்றுண்டி திட்டம் என ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது’’ என்று அமைச்சர் எ.வ.வேலு கூறினார்.

Related Stories: