சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் 15 சதவீதம் உள்ள முதலியார் சமூக ஓட்டுக்காக, புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகத்தை எடப்பாடி அணியினர் நேற்று சந்தித்து ஆதரவு கேட்டனர். ஆனால், அவரோ பாஜவுக்கு மட்டுமே ஆதரவு என்று கூறி அவர்களை திருப்பி அனுப்பிவிட்டார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தமிழகத்தில் அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. அதிமுகவில் உள்ள இரண்டு அணிகளும் (ஓபிஎஸ் - இபிஎஸ்) போட்டி போட்டுக் கொண்டு கூட்டணி கட்சி தலைவர்களை குறிப்பாக சிறிய கட்சியாக இருந்தாலும் அவர்களது வீட்டுக்கே சென்று சந்தித்து வருகிறார்கள். ஈரோடு கிழக்கு தொகுதியில் முதலியார் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் 15 சதவீதம் பேர் உள்ளனர். இதனால், அவர்களது வாக்குகளை பெற, ஏ.சி.சண்முகத்தைச் சந்திக்க, சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டுக்கு நேற்று மாலை அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியை சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, கோகுல இந்திரா ஆகியோர் சென்றனர்.