கோவை அருகே பரபரப்பு: தங்கையின் காதலன் காதை கடித்து துப்பிய அண்ணன்

சூலூர்: தங்கையின் காதலன் காதை அண்ணன் கடித்து துப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்டம், சூலூர் அருகே ஜல்லிபட்டியை சேர்ந்த 28 வயது இளைஞர் விவசாயம் செய்து வருகிறார். இவரது தூரத்து உறவினர் குடும்பத்தை சேர்ந்த ஒருவரது மகள் சூலூர் பகுதியில் வசித்துவருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 2 வருடங்களாக காதலித்துள்ளனர். இந்த நிலையில், காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டு மாட்டு பொங்கல் தினத்தில் தனது காதலி வீடு உள்ள பகுதிக்கு வந்துள்ளார். பின்னர் காதலனுடன் செல்ல தயாராக இருந்த காதலி, வீட்டை விட்டு உடைகளுடன் வந்து காரில் ஏறியுள்ளார்.

இதுகுறித்து தெரிந்த பெண்ணின் அண்ணன், தனது நண்பர்களுடன் சேர்ந்து காரை துரத்தி பிடித்து நிறுத்தியுள்ளார். இதன்பிறகு காருக்குள் இருந்த தனது தங்கையின் காதலனை சரமாரியாக தாக்கியதுடன் கார் கண்ணாடியையும் உடைத்து சேதப்படுத்தியுள்ளார். இதன்பின்னர் 2 பேரும் கட்டிப் புரண்டு சண்டையிட்ட நிலையில், தங்கையின் காதலனின் காதை அண்ணன் கடித்து துப்பிவிட்டார். இதையடுத்து ரத்தவெள்ளத்தில் அலறித் துடித்த காதலனை மீட்டு உடனடியாக சூலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து கிடைத்த தகவலின்பேரில், சுல்தான்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்.

போலீசாரின் கைது நடவடிக்கைக்கு பயந்து கலங்கிய காதலியின் பெற்றோர் காவல் நிலையம் சென்று தாங்கள் செய்தது தவறு என்று மன்னிப்பு கேட்டுள்ளனர். இதுதொடர்பாக தாங்கள் எதுவும் செய்ய முடியாது என்று போலீசார்  கூறினர். இந்தநிலையில், பெண்ணின் பெற்றோர், காதலன் குடும்பத்தினரிடம் சமரசம் பேசியுள்ளனர். இதில் சுமூக உடன்பாடு எட்டவே பெண்ணின் வீட்டார் அவர் விரும்பிய காதலனுக்கு திருமணம் செய்து வைக்க சம்மதித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: