பாஜகவில் சேருங்கள்... அல்லது புல்டோசர் வரும்!: ம.பி பாஜக அமைச்சர் சர்ச்சை பேச்சு

குணா: பாஜகவில் சேருங்கள் அல்லது புல்டோசரை எதிர்கொள்ளுங்கள் என்று மிரட்டல் விடுக்கும் வகையில் மத்திய பிரதேச அமைச்சர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. மத்திய பிரதேச மாநில ஆளும் பாஜக அமைச்சர் மகேந்திர சிங் சிசோடியா,  ரகோகர் நகராட்சி தேர்தல் பிரசாரத்தில் பேசுகையில், ‘பாஜக ஆளும் மாநிலங்களில் புல்டோசர் மூலம் நீதி வழங்கப்படுகிறது.  

மத்திய பிரதேசத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான அரசு,  பல்வேறு குற்றங்களில் ஈடுபட்டவர்களின் சட்டவிரோத வீடுகளை புல்டோசரை கொண்டு  இடித்து வருகிறது. எனவே நீங்கள் பாஜகவில் சேருங்கள்; இல்லாவிட்டால் புல்டோசரை எதிர்கொள்ளுங்கள். இந்தாண்டு நடக்கும் மத்திய பிரதேச தேர்தலில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும்.

அப்போது புல்டோசர் தனது வேலையை செய்யும்’ என்று பேசினார். இவரது பேச்சு தொடர்பான வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மக்களுக்கும், எதிர்கட்சியினருக்கும் அச்சுறுத்தல் கொடுக்கும் வகையில் அமைச்சர் பேசிய கருத்தை பலரும் விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து குணா மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஹரிசங்கர் விஜயவர்கியா கூறுகையில், ‘நிதானத்தை இழந்து அமைச்சர் பேசி வருகிறார். இதன் மூலம் பாஜகவின் உண்மை முகம் தெரிந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்’ என்று கூறினார்.

Related Stories: