திருவனந்தபுரம்: சபரிமலையில் மண்டல, மகர விளக்கு காலம் நிறைவடையும் கட்டத்தில் உள்ளது. பிரசித்தி பெற்ற மகரஜோதி தரிசனம் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் குவிந்த லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் மகரஜோதியை தரிசித்து திரும்பிச் சென்றனர். சபரிமலையில் வழக்கமாக மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னர் பக்தர்கள் வருகை குறைந்து விடும். ஆனால் தற்போது மகரவிளக்கு பூஜை முடிந்த பின்னரும் சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் காணப்படுகிறது. கடந்த 2 தினங்களாக காணப்பட்ட பக்தர்கள் வருகை நேற்றும் தொடர்ந்தது. மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு ஐயப்ப விக்ரகத்தில் திருவாபரணம் அணிவிக்கப்படுவது வழக்கம்.