திருச்சி: ராம ஜெயம் கொலை வழக்கில் சந்தேகத்துக்குரிய 13 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை சென்னையில் இன்று முதல் 6 நாள் நடக்க உள்ளது. தமிழ்நாடு அமைச்சர் கே.என்.நேருவின் தம்பிராமஜெயம் கடந்த 2012 மார்ச் 29ம் தேதி கடத்தப்பட்டு மர்மநபர்களால் கொல்லப்பட்டார். இந்த வழக்கு விசாரணை சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசாருக்கு மாற்றப்பட்டது. எஸ்.பி. ஜெயகுமார் தலைமையில், 40 பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ராமஜெயம் கொலை பாணியில் தமிழகத்தில் நடந்த பல்வேறு கொலை சம்பவங்களில் ஈடுபட்ட ரவுடிகள் மற்றும் அந்த சமயம் திருச்சியில் முகாமிட்டிருந்த ரவுடிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டது.