கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்

நன்றி குங்குமம் தோழி

வாசகர் பகுதி

இன்னும் இரண்டு நாட்களில் அக்னி நட்சத்திரம் துவங்க இருக்கும் நிலையில் கடந்த மாதம் முதலே சூரியன் தன்னுடைய பலத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டான். மக்களை வாட்டி வதைக்க ஆரம்பித்துவிட்டான். இந்த வெயிலின் தாக்கத்தை சமாளித்து நம்மை குளுகுளு என்று வைத்துக் கொள்ள என்ன செய்யலாம்...

*தினமும் குளித்து முடித்ததும் தண்ணீரில் கொஞ்சம் கற்பூரத்தைப் போட்டு மேலே ஊற்றினால் வெப்பக் கதிர்களின் தாக்குதலில் இருந்து நம் உடலை கற்பூரம் குடை போல் காக்கும்.

*தர்பூசணி, ஆப்பிள், கிர்ணிப்பழத்தை சம அளவில் எடுத்து மசித்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து தண்ணீரில் கழுவினால் சருமம் புத்துணர்வு பெறும்.

*வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு மோர் ஊற்றி, அதில் கொத்தமல்லி, இஞ்சி, வெட்டி வேர் சிறிதாக நறுக்கிப் போட்டு உச்சி நேர வெயிலில் சாப்பிட்டால் உடல் கூலாக இருக்கும்.

*நல்லெண்ணெயில் மிளகு, புழுங்கலரிசி, நெல்லி முள்ளி போட்டுக் காய்ச்சி தலைக்குத் தேய்த்து ஊறிய பிறகு ஸ்நானம் செய்ய உடல் உஷ்ணம் குறையும்.

*கோடை காலத்தில் தயிர் சாப்பிடுவதால் இரட்டிப்பு பயன் பெறலாம். செரிமானத்தை எளிமையாக்கும். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

*கோடையில் தாகம் ஏற்பட்டு உடல் சோர்ந்து, அடிக்கடி தண்ணீர் தாகம் எடுக்கும். எலுமிச்சைச் சாறுடன் சர்க்கரையும், உப்பும் சேர்த்து பருகினால் தாகம் கட்டுப்படும்.

*சீரகத்தை கொதிக்கும் நீரில் போட்டு ஆறவைத்து சில நாட்கள் பருகி வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.

*கோடையில் அதிக வியர்வை காரணமாக ஜலதோஷம் ஏற்படும். அதற்கு சிறந்த நிவாரணம். மோரில் சிறிது மிளகுத் தூளைச் சேர்த்து பருகினால் குணமாகும்.

*வெந்தயத்தையும், கோதுமையையும் வறுத்து பின்னர் அவற்றைப் பொடி செய்து தண்ணீரில் குடித்து வந்தால் உடல் உஷ்ணம் தணியும்.

*உள்ளங்காலிலும், உள்ளங்கைகளிலும் மருதாணி இலையை அரைத்து வைத்துக் கொண்டால் குளுமையோ குளுமை.

*கோடைகாலத்தில் காலையில் கஞ்சி வகைகளை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. கம்பு, கேழ்வரகு கூழ் வகைகளை சாப்பிடலாம். பழைய சாதத்துடன் தண்ணீரும் தயிரும் கலந்து சாப்பிடலாம். அல்லது வடிச்ச கஞ்சியும் உப்பும் கலந்து பருகலாம். உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்.

*முல்தானி  மெட்டியுடன் பன்னீர் (ரோஸ்வாட்டர்) கலந்து இரவு படுக்கும் முன் வேர்க்குருவின் மேல் பூசி காலையில் குளித்தால் வேர்க்குரு போய் விடும். தோலும் பளபளக்கும். இளசான பனை நுங்கை வேர்க்குரு உள்ள இடத்தில் தடவினாலும் நீங்கும்.

தொகுப்பு : ச.லெட்சுமி, செங்கோட்டை.

Related Stories: