கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது: ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை அணிவிப்பதோ, குடை பிடிக்கவோ கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. கோயில் வழிபாட்டில் கிராம மக்கள் அனைவரும் சரிசமமாக நடத்தப்பட வேண்டும். சிங்கம்புணரி மல்லாகோட்டை கிராமத்தில் உள்ள கோயில்களில் அனைவரையும் சரிசமமாக நடத்த உத்தரவிடக்கோரி சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் என்பவர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகங்கையை சேர்ந்த பாலசுந்தரம் உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா மல்லாகோட்டை கிராமத்தில் சன்டி வீரன் சுவாமி கோயில் மற்றும் பெரியகோட்டை முத்தையனார் கோயில் பிரசித்தி பெற்றவை.

இங்கு ஆண்டுதோறும் தை திருவிழாவை மிக சிறப்பாக கொண்டாடப்படும். இந்த விழாவின்போது யாருக்கும் முதல் மரியாதையோ அல்லது கோயில் நிர்வாகம் தரப்பில் சிறப்பு மரியாதைகளோ செய்யப்படாது. ஆனால் கடந்த சில ஆண்டுகளாக சசி பாண்டிதுரை என்பவர் அவருக்கு முதல் மரியாதை செய்யுமாறும், சிறப்பு மரியாதை செய்யுமாறு கூறி வருகிறார். விழாவின்போது அவருக்கு தலைப்பாகை கையில் குடையை ஏந்தியவாறு அவரது அடியாட்களுடன் ஊர்வலத்தில் கலந்து கொள்கிறார். பல்வேறு சமூகத்தினரும் ஒன்றாக இணைந்து கொண்டாடும் இந்த விழாவில், அவருக்கு மட்டும் சிறப்பு மரியாதை வழங்குமாறு கோயில் பூசாரிகளை வற்புறுத்தி வருகிறார்.

இது ஏற்கத்தக்கது அல்ல. ஆகவே சிங்கம்புணரி மல்லாகோட்டை கிராமத்தில் நடைபெறும் தைப்பொங்கல் விழா கொண்டாட்டத்தின்போது, அவரது தனது அடியாட்களுடன் பரிவட்டம் கட்டி, கையில் கோலுடன், குடை பிடித்து ஊர்வலத்தில் கலந்து கொள்ள தடை விதிப்பதோடு, யாருக்கும் எந்த முதல் மரியாதையும் சிறப்பு மரியாதையும் செய்யக்கூடாது எனவும் அவ்வாறு கலந்து கொண்டால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் கூறி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், இது போன்ற வழக்குகள் இந்த நீதிமன்றத்துக்கு புதிது அல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு இதே போன்ற வழக்குகள் விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை பிறப்பித்துள்ளது. கோயிலினுள் யாருக்கும் முதல் மரியாதை வழங்குவதோ, தலைப்பாகை, குடைபிடிப்பது அல்லது வேறு ஏதேனும் அடையாளங்களால் குறிப்பிட்ட நபரின் அந்தஸ்தை உயர்த்துவது போன்ற செயல்களிலோ ஈடுபடக்கூடாது.

Related Stories: