சட்டப் பேரவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அலுவலகத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

சென்னை: சட்டப் பேரவை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அலுவலகத்தில், சமீபத்தில் மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெரா உருவபடத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் திருமகன் ஈவெரா சமீபத்தில் உடல் நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னை தலைமை செயலகத்தில் உள்ள சட்டசபை காங்கிரஸ் அலுவலகத்தில் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருமகன் ஈவெரா திருஉருவப் படம் வைக்கப்பட்டிருந்தது. இதை இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அப்போது உருவப்படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரை தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு, துணை சபாநாயகர் பிச்சாண்டி, சட்டப் பேரவை செயலாளர் சீனிவாசன், அமைச்சர்கள் கே.என்.நேரு, பொன்முடி, அரசு கொறடா கோவி செழியன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மமக தலைவர் ஜவாஹிருல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்எல்ஏ நாகை மாலி, இந்திய கம்யூனிஸ்ட் எம்எல்ஏ ராமச்சந்திரன் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். மேலும் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் எம்எல்ஏக்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories: