நாகப்பட்டினம்: புத்தாண்டு மற்றும் தொடர் விடுமுறையால் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா பயணிகள் குவிந்தனர். கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குழந்தைகளுடன் குளித்து மகிழ்ந்தனர். நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. கீழை நாடுகளின் லூர்து நகர் என்று இந்தப் பேராலயம் அழைக்கப்படுகிறது. கிறிஸ்தவ ஆலயங்களில் பசிலிக்கா என்ற சிறப்பு அந்தஸ்து பெற்ற ஆலயமாக வேளாங்கண்ணி பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்தில் ஆங்கில புத்தாண்டையொட்டி சிறப்பு திருப்பலி நடைபெறும். இதில் கலந்து கொள்ள ஏராளமான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் நேற்றே திரண்டனர். இதனால் வேளாங்கண்ணி கடைவீதி மற்றும் கடற்கரை களைகட்ட துவங்கியது.