சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் 4-வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம்: 79 ஆசிரியர்கள் மயக்கம்!

சென்னை: சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் 4-வது நாளாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி கடந்த 27-ம் தேதி முதல் ஆசிரியர்கள் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று 4-வது நாளாக போராட்டம் நீடிக்கிறது.

இந்த நிலையில் நேற்று போராட்டக்குழுவினருடன் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாமல் தோல்வியில் முடிந்தது. எனவே போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் நேற்று வரை 69 ஆசிரியர்-ஆசிரியைகள் மயக்கம் அடைந்துள்ளனர். இன்று காலை 10 பேர் மயக்கம் அடைந்து மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

கல்வித்துறை அமைச்சருடன் இன்று பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்பு உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் எங்கள் கோரிக்கைக்கு வெற்றி கிடைக்கும் என்று நம்புகிறோம். கிடைக்காத பட்சத்தில் எங்களது போராட்டம் தொடரும் என போராட்ட ஒருங்கிணைப்பாளர் ராபர்ட் தெரிவித்துள்ளார்.

Related Stories: