புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம்: ஜன.16-ல் அரசியல் கட்சிகளுக்கு செயல்முறை விளக்கம்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் வாக்களிக்க வசதியாக ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தேர்தல் ஆணையம் தயாரித்துள்ளது. சொந்தஊர்களை விட்டு இந்தியாவிற்குள் வேறு இடங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்காக ரிமோட் வாக்குப்பதிவு உருவாக்கப்பட்டுள்ளது. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் பற்றி ஜனவரி 16ம் தேதி ஆணையம் செயல்முறை விளக்கம் தருகிறது.

அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்த இருக்கிறது. ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரம் (RVM) குறித்து ஜனவரி 31க்குள் அரசியல் கட்சிகள் கருத்துகளை அனுப்ப ஆணையிட்டுள்ளது.

இந்தியாவில் வாக்குச் சீட்டு முறை ஒழிக்கப்பட்டு வாக்குப் பதிவு இயந்திரங்கள் நடைமுறையில் உள்ளன. ஆனால் வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீது மீதான சந்தேகங்களும் விமர்சனங்களும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன.ஆகையால் வாக்குப் பதிவு இயந்திரங்களை மாற்றிவிட்டு பழைய வாக்குச் சீட்டு முறையையே அமல்படுத்த வேண்டும் என்பது சில அரசியல் கட்சிகளின் கோரிக்கையாக இருந்து வருகிறது. இருப்பினும் ஒன்றிய அரசும், தேர்தல் ஆணையமும் வாக்குப் பதிவு இயந்திரத்தையே தொடர்ச்சியாக பின்பற்றி வருகின்றன.

பொதுவாக மாநிலங்களின் தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்களின் போது இடம்பெயர்ந்து பிற மாநிலங்களில் வசிப்பவர்கள், குறிப்பாக தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த மாநிலங்களுக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் கூட்டம் கூட்டமாக மாநிலங்களை விட்டு மாநிலங்களுக்கு தொழிலாளர்கள் சென்று திரும்புகிற சூழ்நிலை இருந்து வருகிறது. சிலர் இந்த காரணத்தால் வாக்களிப்பதில்லை.

இதனை மாற்றும் வகையில் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பணிசெய்யும் மாநிலங்களில் இருந்தபடியே, சொந்த ஊர் வாக்காளர் அடையாள அட்டையை வைத்து வாக்களிக்க வாக்கு பதிவு இயந்திரங்களை உருவாக்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சிகள் ஐஐடிகள் உள்ளிட்ட நிறுவனங்களைச் சேர்ந்த வல்லுநர்கள் பங்கேற்றனர்.

தற்போது இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் வாக்களிக்க வகை செய்யும் ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ரிமோட் வாக்குப் பதிவு இயந்திரங்களின் செயல்பாடுகள் உள்ளிட்டவை தொடர்பாக ஆலோசிக்க ஜனவரி 16-ந் தேதி அனைத்து அரசியல் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை தேர்தல் ஆணையம் கூட்டியுள்ளது. இந்த கூட்டத்தில் ரிமோட் வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்முறை விளக்கம் அளிக்கப்படுகிறது. குறித்து ஜனவரி 31-ம் தேதிக்குள் அரசியல் கட்சிகள் கருத்துகளை அனுப்ப ஆணையிட்டுள்ளது.

Related Stories: