நீலகிரி: உதகை அருகே சீகூர் வனப்பகுதியில் அமைந்துள்ள ஆனிக்கல் மாரியம்மன் கோயிலில் நேற்றைய தினம் கார்த்திகை தீப திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் பங்கேற்பதற்காக உதகை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
இந்த நிலையில், நேற்று மாலை அந்த தீப திருவிழாவில் பங்கேற்று வெளியே வரும் போது அங்குள்ள ஆனிக்கல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது ஆற்றை கடக்க முயன்ற ஜெக்கலொரை கிராமத்தை சேர்ந்த சரோஜா(65), வாசுகி(45), விமலா(35), சுசீலா(56)4 பெண்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.
நேற்று மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் நடைபெற்ற நிலையில், உடனடியாக தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையின், காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அடர்ந்த வனப்பகுதி மற்றும் இரவு நேரம் என்பதால் அவர்களை மீட்க்கும் பணியில் தொய்வு ஏற்பட்டது. இதனை அடுத்து அவர்களை தேடும் பணி நிறுத்தப்பட்டு இன்று காலை 7 மணியளவில் மீண்டும் தொடரப்பட்டது. சுமார் 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் மற்றும் வனத்துறையினர் 3 குழுக்களாக பிரிந்து தேடியதில் தற்போது அவர்கள் அடித்து செல்லப்பட்ட இடத்தில் இருந்து சுமார் 1கி.மீ. தொலைவில் 3 பேரின் உடல்களானது கண்டெடுக்கப்பட்டுள்ளது. இறந்தவர்களை அடையாளம் பண்ணும் பணியானது தற்போது நடைபெற்றுவருகிறது. மேலும் ஆற்றில் சிக்கிய ஒருவரின் உடல்களை தேடும்பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆற்றில் தொடர்ந்து வெள்ளமானது அதிகரித்து வரும் சூழல் தேடுதல் பணியானது கடினமாக உள்ளது. இருப்பினும் தீயணைப்பு வீரர்கள், வனத்துறையினர் மற்றும் காவல்த்துறையினர் தேடுதல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.