புதுடெல்லி: நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் மாநிலங்களவை தலைவராக துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் பொறுப்பேற்று அவையில் தனது முதல் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய மசோதா கடந்த 2015ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. வரலாற்று சிறப்புமிக்க இந்த நாடாளுமன்ற ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
ஜனநாயக வரலாற்றில் முறையாக சட்டப்பூர்வமாக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் நீதித்துறையால் ரத்து செய்யப்பட்டது இணையான சம்பவம் இதைத்தவிர வேறொன்றுமில்லை. ஜனநாயக கட்டமைப்பிற்கு மிகவும் அவசியமான இத்தகைய பிரச்னையில் 7 ஆண்டுக்கும் மேலாக நாடாளுமன்றம் கவனம் செலுத்தாதது அதிருப்தி அளிக்கிறது. எனவே இந்த அவை மக்களவையுடன் இணைந்து பிரச்சனையை தீர்க்க கடமைப்பட்டுள்ளது. அது அவ்வாறு செய்யும் என நம்புகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.