ஆபாச ஆடியோ லீக்கில் சிக்கியதால் பாஜகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட திருச்சி சூர்யா சிவா, கட்சியில் இருந்து விலகல்

சென்னை: பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார். பெண் நிர்வாகியிடம் ஆபாசமாக திட்டியதாக கட்சி பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், பாஜக உடனான உறவை முடித்து கொள்வதாக திருச்சி சூர்யா சிவா தனது டிவிட்டபக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் கூறியதாவது:

அண்ணன் அண்ணாமலை அவர்களுக்கு நன்றி , இதுவரை இந்த கட்சியில் பயணித்தது எனக்கு கிடைத்த இனிய அனுபவம் . நீங்கள் தமிழக பாஜகவிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் . வரக்கூடிய தேர்தலில் கண்டிப்பாக பாஜக இரட்டை இலக்கை அடையும்

அதை அடைய வேண்டும் என்றால் மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் மாற்றப்பட வேண்டும் . இல்லையென்றால் கடந்த கால பாஜகவை போலவே தமிழகத்தில் பாஜக நீடிக்கும். இத்துடன் என் பாஜக உடனான உறவை நான் முடித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

அண்மையில் பாஜக பெண் நிர்வாகியிடம் தொலைபேசியில் ஆபாசமாக திட்டி திருச்சி சூர்யா சிவா பேசியதாக ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக நடவடிக்கை எடுத்த தமிழக பாஜக தலைமை, திருச்சி சூர்யா சிவா-வை பாஜகவின் அனைத்து பொறுப்புகளில் இருந்து சஸ்பெண்ட் செய்து அறிவித்தது. இதனை தொடர்ந்து பாஜகவில் இருந்து விலகுவதாக திருச்சி சூர்யா சிவா அறிவித்துள்ளார்.

Related Stories: