ஓசூர் அருகே நாகமங்கலம் ஏரியில் 60 யானைகள் முகாம்; விரட்டும் பணி தீவிரம்

ஓசூர்: ஓசூர் அருகே நாகமங்கலம் ஏரியில் 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு உலா வருகிறது. கர்நாடக மாநிலம் காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஆண்டு தோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வானகோட்டம் உட்பட்ட மாநில எல்லையான ஜவளகிரி வனப்பகுதி வழியாக தமிழகத்தில் நுழைவது வழக்கம். இந்த ஆண்டும் கடந்த அக்டோபர் மாதம் கர்நாடக மாநில காவேரி வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து நூற்றுக்கும் மேற்பட்ட காட்டு யானைகள், ஓசூர் வனக்கோட்டத்திற்கு உட்பட்ட ஓசூர் சானமாவு, ஊடேதுர்கம், நொகனூர், தேன்கனிக்கோட்டை, உரிகம் உள்ளிட்ட பகுதிகளில் 60க்கும் மேற்பட்ட யானைகள் பல குழுக்களாக பிரிந்து தஞ்சம் அடைந்துள்ளது.

இந்த யானைகள் இரவு நேரங்களில் வனப்பகுதியை சுற்றியுள்ள கிராமங்களில் நுழைந்து, அங்குள்ள பயிரிடப்பட்டுள்ள ராகி, நெல், வாழை உள்ளிட்டவைகளை சேதப்படுத்தியது.

இந்த நிலையில், ஓசூர் அடுத்த ஊடேதுர்க்கம் வனப்பகுதியில் தஞ்சம் அடைந்துள்ள 60க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உணவு, தண்ணீர் தேடி, நேற்று முன்தினம் இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறியது. பின்னர், நேற்று அதிகாலை நாகமங்கலம் ஏரி பகுதியில் சுற்றித்திரிந்தன. தொடர்ந்து வனப்பகுதிக்கு செல்லாமல் நாகமங்கலத்தில் உள்ள ஏரியில் தஞ்சம் அடைந்துள்ளது. இதை அறிந்த கிராம மக்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர், ஏரியில் இருந்த யானைகளை பட்டாசு வெடித்து, மீண்டும் ஊடேதுர்கம் வனப்பகுதிக்கு விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: