கிருஷ்ணகிரி வனப்பகுதிகளில் அபாயங்களை தவிர்க்க 300 கி.மீ., தூரத்திற்கு யானை தாண்டா அகழிகள் சீரமைப்பு; விரைவாக நிவாரணம் வழங்கவும் நடவடிக்கை

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி காப்புகாடுகளில் 270 யானைகள் முகாமிட்டுள்ளது. இவை கிராமங்களுக்குள் புகுந்து ஏற்படுத்தும் அபாயங்களை தவிர்க்க 300 கிலோமீட்டர் தூரத்திற்கு யானை தண்டா அகழிகளை சீரமைக்கும் பணி, துரித கதியில் நடந்து வருகிறது. மேலும் வனத்துறை சார்பில் தொடர்ந்து மக்களுக்கு விழிப்புணர்வு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டு வருகிறது.  

தமிழக-கர்நாடக எல்லை மாவட்டமான கிருஷ்ணகிரி, அதிக வனப்பரப்பை கொண்ட பகுதியாகவும் விளங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் மனித-வனஉயிரின மோதல்கள் தொடர்ந்து வருகிறது. இதனால் ஆண்டு தோறும் உயிர்சேதமும், பயிர்சேதமும் அதிகரிப்பது வாடிக்கையாகி வருகிறது. இந்தநிலையில் நடப்பாண்டு கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் வனக்கோட்டத்திற்கு, கர்நாடகா மாநிலத்தில் உள்ள பன்னார்கட்டா தேசிய பூங்கா மற்றும் காவிரி வன உயிரின சரணாலயத்தில் இருந்து, கடந்த அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் கூட்டமாக வந்த யானைகள், தளி, ஜவளகிரி, நொகனூர், தேன்கனிக்கோட்டை, ஊடேதுர்க்கம், சானமாவு, மகராஜகடை மற்றும் வேப்பனஹள்ளி பகுதிகளில் உள்ள காப்புக்காடுகளில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள், காப்புக்காட்டினை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.

குறிப்பாக ராயக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஊடேதுர்க்கம் காப்புக்காட்டில் 50 யானைகள், ஓசூர்-சானமாவு காப்புக்காட்டில் 3 யானைகள், தேன்கனிக்கோட்டை-நொகனூர், தேன்கனிக்கோட்டை, அய்யூர் காப்புக்காடுகளில் 35 யானைகள், ஜவளகிரி-தளி, ஜவளகிரி, பனை, உளிபண்டா காப்புக்காடுகளில் 65 யானைகள், கிருஷ்ணகிரி-மகாராஜகடை, வேப்பனஹள்ளி காப்புக்காடுகளில் 8 யானைகள் (இவை கடந்த ஓராண்டிற்கு மேலாக இப்பகுதியில் முகாமிட்டுள்ளன), அஞ்செட்டி-பனை, அஞ்செட்டி, உடுபுராணி, நாட்றாம்பாளையம், பிலிகுண்டு காப்புக்காடுகளில் 35 யானைகள், உரிகம், தக்கட்டி, கெஸ்தூர், மல்லஹள்ளி காப்புக்காடுகளில் 75 யானைகள் என மொத்தம் சுமார் 270 யானைகள் முகாமிட்டுள்ளன.

வனப்பரப்பு அதிகமுள்ள இப்பகுதிகளில் முகாமிட்டுள்ள யானைக் கூட்டம், பகல் நேரங்களில் காப்புக்காடுகளில் தங்கியும், இரவு நேரங்களில் வெளியேறி வருவதையும் வழக்கமாக கொண்டுள்ளன. ஒருசில நேரங்களில் பகல் முழுவதும் காப்புக்காட்டிற்கு வெளியில் உள்ள அரசு நிலங்களில் முகாமிட்டு, அருகிலுள்ள கிராம விவசாய பகுதிகளுக்குள் சென்று, ராகி, நெல், வாழை, தக்காளி, சோளம் மற்றும் தென்னை உள்ளிட்ட பயிர் வகைகளை சேதப்படுத்தி வருகின்றன. இவ்வாறு வெளியில் வரும் யானைக்கூட்டங்களை வனப்பணியாளர்கள், வேட்டைத் தடுப்பு காவலர்கள் மற்றும் அதிவிரைவு மீட்பு குழுவினர், மீண்டும் அவற்றை பாதுகாப்பாக காப்புக்காடுகளுக்கு அனுப்பி, உயிர் சேதம் மற்றும் பெருமளவு பயிர் சேதங்கள் ஏற்படாமல் தடுத்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பரப்பை ஒட்டியுள்ள கிராமங்கள், ஆண்டு ேதாறும் யானைகளின் தாக்குதலுக்கு ஆளாகி வருகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில் அரசு, பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தவகையில் நடப்பாண்டில் தற்போது காப்புக்காடுகளில் யானைகள் முகாமிட்டுள்ளது. இந்த யானைகள், கிராமங்களில் புகுவதை தடுக்கும் வகையில் 300 கிலோ மீட்டர் தூரத்திற்கு யானை தாண்டா அகழிகள் வெட்டப்பட்டுள்ளது. தற்போது இதனை மேலும் சீரமைக்கும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகிறது. இதேபோல் கோலட்டி பகுதியில் 5கிலோ மீட்டர் தொலைவிற்கு ஓரிடத்தில் இரும்பு வடக்கம்பிகள் அமைக்கம் பணியும் நடக்கிறது.  

மேலும், பொதுமக்கள் காப்புக்காட்டிற்கு கால்நடைகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்ல வேண்டாம் எனவும், காப்புக்காட்டிற்கு அருகிலுள்ள விவசாய நிலங்களுக்கு இரவு காவலுக்குச் செல்ல வேண்டாம் எனவும், இரவு நேரங்களில் வீட்டின் வெளியில் மின் விளக்குகளை ஒளிரச் செய்யும்படியும், பொதுமக்களுக்கு தொடர்ந்து எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அதோடு பாதிப்புகளை தவிர்ப்பது குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதோடு யானைகள் உயிரிழப்பை தடுக்க விவசாய நிலங்களை சுற்றி திருட்டுத்தனமாக மின்வேலி அமைப்பதை தவிர்க்கவும், அவ்வாறு மின்வேலி அமைப்பது கண்டுபிடிக்கப்பட்டால், வன உயிரின பாதுகாப்பு சட்டத்தின்படி, வழக்கு பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் வன உயிரினங்களால் ஏற்படும் பயிர் சேத விவரங்களை, சம்பந்தப்பட்ட வனச்சரக சரக அலுவலகங்களில் தெரிவிக்கும் பட்சத்தில், வனத்துறை மூலம் விரைவில் நிவாரணத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்

Related Stories: