பொள்ளாச்சி: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில், கடந்த ஜூன் மாதம் துவக்கத்திலிருந்து தொடர்ந்து பெய்த மழையால், வெளியூர்களுக்கு இளநீர் அனுப்பும் பணி குறைந்தது. இருப்பினும், ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு கனரக வாகனங்கள் மூலம் இளநீர் அனுப்பும் பணி தொடர்ந்திருந்தது. தென்மேற்கு பருவமழைக்கு பிறகு இளநீர் உற்பத்தி அதிகரிப்பால், பொள்ளாச்சி மற்றும் ஆனைமலை சுற்றுவட்டார கிராமங்களிலிருந்து கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியிலிருந்து இளநீர் அனுப்பும் பணி நாளுக்கு நாள் அதிகரித்தது.
சுமார் 3 மாதமாக தினமும் 3 லட்சம் வரையிலான இளநீர், வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களுக்கு வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டது. இதற்கிடையே, சமீபத்தில் தொடர்ந்து பெய்த வடகிழக்கு பருவமழையால் இளநீர் உற்பத்தி மேலும் அதிகமானது. இதனால் கடந்த ஒரு வாரமாக தினமும் 5 லட்சம் வரையிலான இளநீர் வெளியிடங்களுக்கு அனுப்பப்பட்டது. இளநீர் அறுவடை வழக்கத்தைவிட அதிகரிப்பால், நேற்றைய நிலவரப்படி தோட்டங்களில் பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.15 ஆக சரிந்தது. 2 மாதத்திற்கு முன்பு, பண்ணை விலையாக ஒரு இளநீர் ரூ.30 வரை இருந்தது. தற்போது மிகவும் சரிவால், உரிய விலையில்லாமல் தென்னை விவசாயிகள் வேதனையடைந்தனர்.