திருவண்ணாமலை: திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்களின் வசதிக்காக மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட இருப்பதாக அரசு முதன்மை செயலாளர் கோபால் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீபவிழா நேற்றுமுன்தினம் தொடங்கியது. வரும் 6ம்தேதி மகாதீப விழா நடைபெற உள்ளது. விழாவில் பங்கேற்கும் பக்தர்களின் வசதிக்காக வரும் 5ம்தேதி முதல் 7ம்தேதி வரை 3 நாட்களுக்கு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மூலம் 2,700 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
அதற்காக, திருவண்ணாமலையில் 9 தற்காலிக மற்றும் 4 கூடுதல் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்படுகிறது. சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்து, போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் கோபால், திருவண்ணாமலையில் நேற்று ஆய்வு நடத்தினார். அப்போது, சிறப்பு பஸ்கள் நிறுத்துவதற்காக அமைக்கப்படும் தற்காலிக பஸ் நிலையங்களையும், அரசு போக்குவரத்துக் கழக பணிகளையும் அவர் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறியதாவது:தீபத்திருவிழாவை முன்னிட்டு, சென்னை, புதுச்சேரி, பெங்களூரு, சேலம், வேலூர், கோவை, கடலூர், நாகை, மதுரை, திருச்சி, நெல்லை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய நகரங்களில் இருந்து 2,700 சிறப்பு பஸ்கள், 6,500 நடைகள் இயக்கப்படும்.