மர்ம சாவில் 4 மாதத்துக்கு பின் திருப்பம் கழுத்தை நெரித்து பெண் கொல்லப்பட்டது அம்பலம்: கணவரிடம் போலீசார் விசாரணை

தண்டையார்பேட்டை: கடந்த 4 மாதத்திற்கு முன் இளம்பெண் மர்மமான முறையில் இறந்த சம்பவத்தில், கழுத்தை நெரித்து அவர் கொலை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது. இதையடுத்து, அவரது கணவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புதுவண்ணாரப்பேட்டை நாகூர் தோட்டத்தை சேர்ந்தவர் செல்வம் (30), தனியார் நிறுவன ஊழியர். இவரின் மனைவி சுமித்ரா (26). இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் வீட்டில் சுமித்ரா மர்மமான முறையில்  இறந்து கிடந்தார். வேலைக்கு சென்று வீடு திரும்பிய கணவர் செல்வம், இதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் சென்னை துறைமுக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, சுமித்ராவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குபதிவு செய்து சுமித்ராவின் மர்மச்சாவு பற்றி விசாரித்து வந்தனர். இந்நிலையில், சுமித்ராவின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்தது. அதில் சுமித்ரா கழுத்தை நெரித்து கொல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து சந்தேக மரணம் என்று காசிமேடு போலீசார் வழக்குபதிவு செய்தனர். வீட்டில் தனியாக இருந்த சுமித்ராவை கழுத்தை நெரித்து கொன்றது யார் என்பது குறித்து கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரிடம் துருவி துருவி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: