வாழ்வின் பயணத்தில் நாம் அறியும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்வீட்

சென்னை: திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில்; மனிதன் உணர்ச்சிக் குவியல்களால் ஆனவன். அன்பின் தேடலில்தான் வாழ்நாளெல்லாம் நம் வாழ்வின் பயணம் அமைகிறது. தென்காசியின் வேங்கடம்பட்டியைச் சேர்ந்த திருமாறன், தனது தந்தை இராமசுந்தரமின் நினைவிடத்தைத் தேடி மலேசியாவுக்கு மேற்கொண்ட பயணம் அவரது வாழ்வின் தேடல் என்றே நான் உணர்கிறேன்.

இந்தப் பயணத்தில்,  திருமாறனின் அன்பு மட்டுமல்ல, கடல் கடந்து மலேசியாவில் வாழும் தமிழர்களின் பண்பாடும் வெளிப்படுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கும் முன்னால் இராமசுந்தரம் வழங்கிய மிதிவண்டி குறித்து இன்றும் நினைவில் வைத்திருக்கும் பெருமாள், இளம் வயதிலேயே மறைந்துவிட்ட இராமசுந்தரத்தை மறவாத நாகப்பன் உள்ளிட்டோர் தமிழரின் தனித்துவமான பண்பாட்டின் அடையாளங்களே. தாய்த்தமிழ்நாடு திரும்பிய பின் தன் தாயையும் இழந்த திருமாறன், ஆதரவற்றவராக அல்லாமல் பலருக்கும் ஆதரவு தரும் ஆலமரமாக இருப்பதை படித்தபோது நெகிழ்ந்து நெக்குருகிப் போனேன்.

வாழ்வின் பயணத்தில் நாம் அறியும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒன்றை நமக்குக் கற்றுத்தந்து கொண்டே இருக்கிறார்கள். திருமாறனின் தொண்டு சிறக்கட்டும்! மனிதம் தழைக்கட்டும்! இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: