5 பேருக்கு வீடுகளை சரிசமமாக பிரித்து கொடுத்த நிலையில் சொத்துக்காக தாயை படுகொலை செய்த மகன்: மதுரவாயல் போலீசில் சரண்

சென்னை: வீட்டை தனது பெயருக்கு எழுதி தர மறுத்த, தாயை படுகொலை செய்த மகன் போலீசில் சரணடைந்தார். இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயலை அடுத்த ஷேக் மானியம் பகுதி தர்மராஜா கோயில் 7-வது தெருவை சேர்ந்தவர் சரோஜா(80). இவருக்கு 4 மகள்களும், கபாலி(56) என்ற ஒரு மகனும் உள்ளனர். அதே பகுதியில் 4-வது தெருவில் கபாலி தனது 2 மனைவிகளுடன் வசித்து வருகிறார். சில ஆண்டுகள் துபாயில் வேலை பார்த்த கபாலி வேலைக்கு போகாமல் வீட்டிலேயே இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று காலை கபாலி தனது தாயார் வீட்டுக்கு சென்றார். அப்போது சரோஜா பெயரில் இருக்கும் வீட்டை தன் பெயருக்கு மாற்றித் தருமாறு கேட்டு அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கபாலி, வீட்டிலிருந்த அரிவாளால் தாய் சரோஜாவை வெட்டிப் படுகொலை செய்தார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் வந்து பார்த்தபோதுதான், கபாலி தாயாரை வெட்டி படுகொலை செய்திருப்பது தெரியவந்தது.   தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மதுரவாயல் போலீசார் சரோஜாவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையே கபாலி மதுரவாயல் போலீசில் சரணடைந்தார்.

கபாலியை கைது செய்த போலீசார் அவரிடம் விசாரணை செய்தனர். விசாரணையில், கபாலி மற்றும் அவரது 4 சகோதரிகளுக்கு சரோஜா சொத்தை சரி சமமாக பங்கு பிரித்து கொடுத்துள்ளார். ஆனால், தற்போது சரோஜா தான் வசித்து வரும் வீட்டை யார் பெயரிலும் எழுதி வைக்காமல் இருந்துள்ளார். அந்த வீட்டையும் கேட்டு தாயிடம் கபாலி அடிக்கடி தகராறு செய்துள்ளார். இந்த நிலையில், நேற்று சரோஜாவிடம் வீட்டை தனது பெயருக்கு எழுதி தரும்படி அவர் வற்புறுத்தியுள்ளார். இதுதொடர்பாக, அவர்களிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கபாலி அரிவாளால் பெற்ற தாயையே வெட்டி கொலை செய்தது தெரிய வந்தது. கபாலியிடம் மதுரவாயல் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். சொத்துக்காக பெற்ற தாயை மகனே வெட்டிக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: