தடையை மீறி மீன்பிடிக்க சென்றதால் பயங்கர ஆயுதங்களுடன் மீனவர்கள் திடீர் மோதல்: 4 பேர் மண்டை உடைப்பு

மரக்காணம்: விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது. இதன் காரணமாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம் என்று மீன்வளத்துறை அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். இந்நிலையில் மரக்காணம் பேரூராட்சிக்குட்பட்ட கைப்பணிகுப்பம் மீனவர் பகுதியை சேர்ந்த இளையராஜா (30), தடையை மீறி நேற்று முன்தினம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளார். இதனை பார்த்த அதே கிராமத்தை சேர்ந்த கார்த்தி (35) அவரை தட்டிக் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து இளையராஜா மற்றும் அவருக்கு ஆதரவாக பேசிய மற்றொரு கார்த்தி ஆகிய 2 பேரின் பைபர் படகுகளை கடற்கரை ஓரமிருந்து பாதுகாப்பாக டிராக்டர் மூலம் இழுத்து செல்லக்கூடாது என்று பஞ்சாயத்து குழுவினர் தடை விதித்துள்ளனர். இதுபற்றி இளையராஜா நேற்று முன்தினம் மரக்காணம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். இந்நிலையில் நேற்று இளையராஜா தரப்புக்கும், இவரை தட்டிக்கேட்ட கார்த்தி தரப்புக்கும் மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டு சண்டையாக மாறியுள்ளது.

2 கோஷ்டிகளை சேர்ந்தவர்களும் இரும்பு பைப், தடி போன்ற ஆயுதங்களை கொண்டு தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பையும் சேர்ந்த 4 பேரின் மண்டை உடைந்து படுகாயம் அடைந்தனர். தகவலறிந்த மரக்காணம் போலீசார் சென்று அங்கு கூடியிருந்தவர்களை விரட்டியடித்தனர். இருதரப்பு புகாரின் பேரில் 10க்கும் மேற்பட்டோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories: