கோவாவில் தேசிய அளவில் நடந்த கபடி போட்டியில் அரசு கல்லூரி மாணவி தங்க பதக்கம்

குடியாத்தம்:  தேசிய அளவில் நடந்த கபடி போட்டியில் அரசு கல்லூரி மாணவி தங்க பதக்கம் வென்றார். மேலும், சர்வதேச போட்டியில் பங்கேற்க நிதி வசதி இல்லாததால் எம்எல்ஏ ரூ.25 ஆயிரம் ரொக்கம் வழங்கினார். குடியாத்தம் அடுத்த மோடிகுப்பம் கிராமத்தை சேர்ந்த மணி என்பவரின் மகள் சந்தியா. இவர் குடியாத்தம் அடுத்த காந்தி நகரில் உள்ள அரசு திருமகள் ஆலைக்  கலை, அறிவியல் கல்லூரியில் பிஎஸ்சி வேதியியல் துறையில் இறுதி ஆண்டு படித்து வருகிறார். இவர் கடந்த 3 ஆண்டுகளாக கபடி விளையாட்டு பயிற்சி பெற்று வருகிறார்.

மேலும் வட்ட, மாவட்ட, மாநில அளவில் கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கு பெற்று தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்து உள்ளார். அதன்படி, கடந்த வாரம் கோவாவில் தேசிய அளவில் கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் போட்டியில் பங்கேற்றனர். இதில் சந்தியா, பெண்கள் பிரிவில் பங்கேற்று தங்கம் பதக்கம் வென்று, நேபாள நாட்டில் போக்ராவில் நடைபெறும் சர்வதேச போட்டியில் பங்கு பெற தகுதி பெற்றுள்ளார். இந்நிலையில், போதிய நிதி  வசதி இல்லாததால், அவர் சர்வதேச போட்டியில் பங்கு பெற செல்லவில்லை என தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் எம்எல்ஏ அமலு விஜயன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கள்ளூர் ரவி ஆகியோர் மாணவியை சந்தியாவை நேரில் சந்தித்து ரூ.25 ஆயிரம் நிதியுதவி அளித்து, சர்வதேச அளவிலான போட்டியில் பங்கு பெற்று வெற்றிபெற்று சாதனை படைக்கும்படி வாழ்த்தினர். மேலும், சந்தியாவுக்கு தொடர்ந்து உதவி செய்வதாக உறுதி அளித்தனர். அப்போது கவுன்சிலரும், நகராட்சி வரி  குழு உறுப்பினருமான மனோஜ் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Related Stories: