பவானிசாகர் அணை மேல் பகுதியில் சிறுத்தை நடமாட்டம்: வீடியோ வைரல்

ஈரோடு: பவானிசாகர் அணை மேல்பகுதியில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர் தேக்கப் பகுதியை ஒட்டி வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் வசிக்கும் யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் அணை நீர் தேக்கப் பகுதிக்கு வந்து தண்ணீர் குடித்து செல்வது வழக்கம். அணையின் நீர்த்தேக்க பகுதிக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி இல்லை. அதே சமயம் 24 மணி நேரமும் பொதுப்பணித்துறை ஊழியர்கள் பணியில் இருந்து அணை நீர் தேக்க பகுதியை கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் பவானிசாகர் அணை மேல்பகுதியில் சிறுத்தை ஒன்று சர்வ சாதாரணமாக நடந்து செல்லும் காட்சி தற்போது வெளியாகி உள்ளது. பணியிலிருந்த பொதுப்பணித்துறை ஊழியர்கள் வீடியோ  எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். சிறுத்தை அதே இடத்தில் நீண்ட நேரம் உலாவியதாக அவர்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். பவானிசாகர் அணையின் மேற்பகுதியில் சிறுத்தை நடமாடியதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர். சிறுத்தை நடமாடிய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related Stories: