திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பவுர்ணமி கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் நேரடி ஆய்வு நடத்தினர். பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய ஒற்றை வரிசை ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாள் நடைபெறும் விழாவின் நிறைவாக, அடுத்த மாதம் 6ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 மணிக்கு, அண்ணாமலையார் கோயிலில் பரணி தீபமும், மாலை 6 மணிக்கு 2668 அடி உயர மலை மீது மகா தீபமும் ஏற்றப்படும். தீபத்திருவிழாவை தரிசனம் செய்ய, லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.