திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை கைசிக துவாதசியையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி, நேற்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி 4 மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சுப்ரபாத சேவை, தோமாலை சேவைக்கு பிறகு சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி வரை உக்கிர சீனிவாசமூர்த்தி ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 4 மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பக்தர்கள் உக்கிர சீனிவாசமூர்த்தியை, வெங்கடதுரைவார்’ என்றும் அழைப்பர். வீதி உலா முடிந்ததும் உற்சவர்கள் கோயிலுக்குள் கொண்டு செல்லப்பட்டு கோயில் உள்ளே கருடாழ்வார் சன்னதி அருகே காலை 7 மணி அளவில் கைசிக துவாதசி ஆஸ்தானம் நடைபெற்றது.