4 குண்டுகள் துளைத்தன; இம்ரான் அதிர்ச்சி தகவல்: மருத்துவமனையில் இருந்து மக்களுக்கு உரை

இஸ்லாமாபாத்: ‘எனது உடலில் 4 துப்பாக்கி குண்டுகள் துளைத்தன,’என்று உயிர் தப்பிய பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலை முன்கூட்டியே நடத்த வலியுறுத்தி அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பாகிஸ்தான் தெஹ்ரிக் இ இன்சாப் (பிடிஐ) கட்சி தலைவருமான இம்ரான்கான் பொதுக்கூட்டங்கள், பேரணி நடத்தி வருகிறார். பஞ்சாப் மாகாணத்தின் வசிராபாத்தில் நேற்று முன்தினம் நடந்த பேரணியில் பங்கேற்ற இம்ரான்கானை, நவேத் என்ற இளைஞர் துப்பாக்கியால் சுட்டார். இதில், அவருடைய காலில் குண்டுகள் பாய்ந்தன.

லாகூரில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார். காலில் இருந்து தோட்டாக்கள் அகற்றப்பட்டு, அவரின் உடல்நிலை சீராக உள்ளது. இம்ரான் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதை கண்டித்து, நாடு முழுவதும் அவரது கட்சியினர் நேற்று போராட்டம் நடத்தினர். இந்நிலையில், இம்ரானை சுட்ட நவேத், வாக்குமூலம் அளிக்கும் வீடியோ சமூகவலைதளத்தில் வெளியானது தொடர்பாக சில போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மருத்துவமனையில் இருந்து முதல் முறையாக நாட்டு மக்களுக்கு இம்ரான் நேற்றிரவு உரையாற்றினார். அதில், ‘எனது வலது காலில் 4 குண்டுகள் துளைத்தன. என்னை கொல்ல திட்டமிட்டு இருப்பதாக ஒருநாளைக்கு முன்பாகவே எனக்கு தகவல் கிடைத்தது. என்னை சுடுவதற்கு 2 பேர் வந்திருந்தனர். மற்றொருவனும் சுட்டு இருந்தால், நான் உயிர் தப்பி இருக்க மாட்டேன். இது திட்டமிட்டு நடந்த சதி. இது பற்றி ஆதாரங்களுடன் விளக்குவேன்,’ என தெரிவித்தார்.

Related Stories: