மொகாதிசு: சோமாலியாவில் தீவிரவாதிகள் நடத்திய 2 கார் குண்டுவெடிப்பில் 100 அப்பாவி பொதுமக்கள் பலியானதாக அந்நாட்டு அதிபர் ஷேக் முகமது கூறி உள்ளார். சோமாலியா தலைநகர் மொகாதிசுவில் உணவகங்கள் அமைந்துள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் நேற்று முன்தினம் மதியம் 2 கார் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில், 100 பேர் பலியானதாக அந்நாட்டின் அதிபர் ஷேக் முகமது நேற்று உறுதி செய்துள்ளார். குண்டுவெடிப்பால் சாலையில் சென்ற வாகனங்கள் வெடித்து சிதறி, பொதுமக்கள் உடல் சிதறி பலியானதாக கூறப்படுகிறது. இந்த குண்டுவெடிப்பை அல்கொய்தாவுடன் தொடர்புடைய அல்-ஷபாப் தீவிரவாத அமைப்பு நடத்தி இருப்பதாக சோமாலியா அரசு குற்றம்சாட்டி உள்ளது.