குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வராது; 15 வயது முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும்: பஞ்சாப் உயர் நீதிமன்றம் தீர்ப்பு

சண்டிகர்: ‘பதினைந்து வயதை தாண்டிய முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும், அது குழந்தை திருமண சட்டத்தின் கீழ் வராது’ என பஞ்சாப்-அரியானா உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அரியானா மாநிலத்தை சேர்ந்த ஜாவேத் (26) என்பவர் கடந்த ஜூலை மாதம் 16 வயது சிறுமியை திருமணம் செய்து கொண்டார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்யப்பட்டு, மைனர் பெண் என்பதால் சிறுமி பஞ்ச்குலா சிறார் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார்.

இதற்கிடையே, தனது மனைவியை மீட்டுத் தரக் கோரி ஜாவேத் தரப்பில் பஞ்சாப்-அரியானா நீதிமன்றத்தில் ஹேபியஸ் கார்பஸ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி விகாஸ் பால் அளித்த தீர்ப்பில், ‘‘இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி 15 வயது பூர்த்தி அடைந்தாலே, அந்த பெண் திருமணம் செய்து கொள்ளலாம். அதன்படி, 15 வயதுக்கு மேற்பட்ட முஸ்லிம் சிறுமிகளின் திருமணம் சட்டப்படி செல்லும்.

அதை குழந்தை திருமண சட்டத்தின் கீழ் கொண்டு வர முடியாது. பெற்றோரின் சம்மதம் இல்லாமல் கூட திருமணம் செய்து கொள்ளலாம். எனவே, சிறுமியை காப்பகத்தில் இருந்து விடுவித்து, அவரை கணவருடன் அனுப்பி வைக்க வேண்டும்,’ என தீர்ப்பளித்தார்.

கவனத்தை ஈர்க்கும் தீர்ப்பு

அரசியல் அமைப்பு சட்டப்படி 18 வயதுக்கு குறைவான மைனர் பெண்களுக்கு திருமணம் செய்வது செல்லாது என பொது சட்டம் உள்ளது. இதன்படி, 18 வயதுக்கு குறைவான முஸ்லிம் பெண்களின் திருமணத்தை அங்கீகரிக்கக் கூடாது என்ற வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், பஞ்சாப் அரியானா உயர் நீதிமன்ற அளித்துள்ள தீர்ப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories: